என் மலர்tooltip icon
    • போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது.
    • முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றும் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. சதுர்த்தியும், கிருத்திகையும் இணைந்து வரும் இன்று முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் வணக்கம்! திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென நாம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

    இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக, சதுர்த்தியும் கிருத்திகையும் இணைந்து வரும் சிறப்பான நன்னாளான இன்று அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று, அருள்மிகு முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை நாம் பாராயணம் செய்ய வேண்டுமென உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

    அதே போல வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பௌர்ணமியன்று, மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் மக்கள் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்!

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

    வீர தண்டாயுதபாணிக்கு அரோகரா!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
    • 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.

    வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் நண்பகல் 12 முதல் 3 மணிவரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.

    நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் QR Code உடன் நுழைவுச்சீட்டு பெற்ற 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.

    தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு கர்ப்பிணி, முதியோர், மாணவ- மாணவியர் உள்ளிட்டோர் கட்டாயமாக வரவேண்டாம் என தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
    • சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதி.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

    அவருக்கு தொடர் காய்ச்சல் நீடித்து வந்ததால், உடனடியாக அவரை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் தேறியவுடன் ஓரிரு நாட்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு.
    • இந்த கூட்டம் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

    தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு.

    இந்த கூட்டம் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

    • கார்த்திகை விரதம்.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மாசி-11 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி காலை 10.08 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : பரணி மாலை 5.25 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம், சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம், அலங்காரம்

    இன்று கார்த்திகை விரதம். திருவொற்றியூர், திருவெண்காடு, விருத்தாசலம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருவீதிஉலா. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பிரணவ உபதேசம் அருளிய காட்சி. கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள் சந்திர பிரபையில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

    நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-அமைதி

    கடகம்-போட்டி

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-உற்சாகம்

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- ஆக்கம்

    மகரம்-புகழ்

    கும்பம்-அனுகூலம்

    மீனம்-பக்தி

    • மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.

    நீக்கப்பட்ட 97.37 லட்சம் பெயர்களில், உயிரிழந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என கணக்கிடப்பட்டது.

    இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

    பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.

    அதேபோல், இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தமாக 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி கடந்த 10-ந்தேதி நிறைவடைந்தது.

    வரைவு வாக்காளர் பட்டியலில், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என்று காட்டப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 23 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி கணக்கிடும்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.

    மாவட்டங்களில் நாளை காலை 10 மணிக்கு மேல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் தரவுகளை வெளியிடுவார். voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணைய செயலியில் வாக்காளர் பெயர்களை சரிபாரக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இறந்தவர்கள் பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.
    • பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது.

    ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளான நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

    தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் 7 மறைவிடங்களை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இறந்த 20 பேரும் பயங்கரவாதிகள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் பன்னு மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் சமீபத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

    இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

    மேலும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச சட்டங்களை மீறி எல்லை தாண்டி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு மிகச்சரியான மற்றும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

    தனது நாட்டின் உள்நாட்டுச் சவால்கள் மற்றும் பாதுகாப்புத் தோல்விகளை மறைக்கவே பாகிஸ்தான் இத்தகைய தாக்குதல்களை நடத்துகிறது.

    ஆனால், இத்தகைய வான்வழித் தாக்குதல்களால் பாகிஸ்தானின் உள்நாட்டுக் குறைகளை ஒருபோதும் மறைக்க முடியாது.

    நாட்டின் நிலப்பரப்பையும் மக்களின் பாதுகாப்பையும் காப்பது எங்களின் சட்டப்பூர்வமான மற்றும் தேசியப் பொறுப்பு" என்று தெரிவித்துள்ளது. 

    • டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகளுக்கு 64% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • குடியேற்றக் கொள்கைகளில் 58% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் இறக்குமதி வரி கொள்கைகளை ரத்து செய்வதற்கு முன்னதாக இந்தச் சர்வே நடத்தப்பட்டது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது அரசு குறித்து அந்நாட்டு மக்களிடம் அண்மையில் சர்வே நடத்தப்பட்டது.

    ஏபிசி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இணைந்து இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது.

    இதன்படி, 65% அமெரிக்கர்கள் டிரம்ப் பணவீக்கத்தைக் கையாள்வதில் தோல்வியடைந்துள்ளதாக கருதுகின்றனர்.

    டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகளுக்கு 64% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 34% பேர் மட்டுமே இதை ஆதரிக்கின்றனர்.

    டிரம்பின் சர்வதேச உறவுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை 62% மக்கள் அங்கீகரிக்கவில்லை.

    குடியேற்றக் கொள்கைகளில் 58% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    குடியேற்றக் கொள்கைகளுக்காக ராணுவத்தைப் பயன்படுத்தும் அவரது திட்டத்திற்கு 54% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக, மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் நடந்த அமலாக்க நடவடிக்கைகளின் போது இரு அமெரிக்கக் குடிமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்த அதிருப்தி அதிகரித்துள்ளது.

    ஒட்டுமொத்தப் பொருளாதார நிர்வாகத்தில் 57% மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

    நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க எந்தக் கட்சி சிறந்தது என்ற கேள்விக்கு, டிரம்ப் உடைய குடியரசுக் கட்சி கட்சி என 33% பேரும், ஜனநாயகக் கட்சி என 31% பேரும், யாருமில்லை இல்லை என 31% பேரும் தெரிவித்துள்ளனர்.

    Yahoo மற்றும் YouGov நடத்திய மற்றொரு சமீபத்திய ஆய்வில், அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபராக டிரம்ப்-ஐ 40% அமெரிக்கர்கள் தேர்வு செய்துள்ளனர்.

    டிரம்ப்பின் ஒட்டுமொத்த அங்கீகார விகிதம் 39% ஆகக் குறைந்துள்ளது. வெறும் 12% பேர் மட்டுமே அவரை ஒரு சிறந்த அதிபர் என்று கருதுகின்றனர்.  

    • மறுநாளே அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றார்.
    • உமிழ்நீரில் இருக்கும் பாக்டீரியாக்கள், மனிதர்களின் திறந்த காயங்கள் வழியாக உடலில் நுழையும்

    இந்திய வம்சாவளியை சேர்ந்த 52 வயதான மன்ஜீத் சங்கா இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் மன்ஜீத் சங்கா கையில் ஒரு சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் மன்ஜீத் தனது செல்ல நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நாய் அவரது காயத்தை நக்கியுள்ளது.

    அடுத்த நாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்கு மறுநாளே அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குக் கடுமையான 'Sepsis' தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

    மன்ஜீத் சுமார் 32 வாரங்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடினார். கோமா நிலையில் இருந்தபோது, அவரது இதயம் 6 முறை துடிப்பதை நிறுத்தியது.

    அவரது உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி, மருத்துவர்கள் அவரது இரண்டு கைகளையும், முழங்கால்களுக்கு கீழே, இரண்டு கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

    கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி மன்ஜீத் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்போது அவர் செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்காக நிதி திரட்டி வருகிறார்.

    செல்லப் பிராணிகளின் உமிழ்நீரில் இருக்கும் பாக்டீரியாக்கள், மனிதர்களின் திறந்த காயங்கள் வழியாக உடலில் நுழையும்போது இத்தகைய உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.    

    அனுமன் பிறந்த இடமாகக் கருதப்படும் அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜை செய்தனர்.

    2022-ல் வெளியாகி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கன்னட படம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா'.

    இதன் முன்கதையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான 'காந்தாரா சாப்டர் 1' உலக அளவில் சுமார் 855 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்நிலையில் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

    'ஜெய் ஹனுமான்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி ஹனுமானாக நடிக்க உள்ளார்.

    'ஜெய் ஹனுமான்' படத்தை, கடந்த 2024 இல் 'ஹனுமான்' என்ற படத்தை எடுத்து கவனம் பெற்ற தெலுங்கு இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்க உள்ளார். உயர்தர கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாக உள்ளது. 

    கர்நாடக மாநிலம் ஹம்பி அருகே, அனுமன் பிறந்த இடமாகக் கருதப்படும் அஞ்சனாத்ரி பெட்டாவில் நேற்று ஜெய் ஹனுமான் படக்குழு சிறப்பு பூஜை செய்து படப்பிடிப்பை தொடங்கியது.

    இதில் ரிஷப் ஷெட்டி தனது மனைவி பிரகதி ஷெட்டியுடன் கலந்து கொண்டார். இயக்குனர் பிரசாந்த் வர்மா மற்றும் தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

    மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். கௌரா ஹரி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

    தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.   

    ×